விடியலைத்தேடும் யாழருவி

தாயின் பாலுக்கு அழுத காலம்போய் தாயின் மார்பில் பால்சுரக்க தாயின்முன் முண்டமாய்க்கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் எண்ணிக்கை கொஞ்சமா நெஞ்சமா? ஏன் இவ்வாறான வெறித்தனமாக வாழ்க்கைதாயைத்தவிர வேறு ஒன்றும் தெரியாத பாலகனை கொல்வது ஏன்?இதுவா உனது புத்தனின் போதனை!

அன்னை திரேசா


AM - குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் வலம் வந்தவர் அன்னை திரேசா. மகத்துவம்மிக்க மாபெரும் பணிகளை ஆற்றி வந்த இந்த மனிதநேயம் மரணித்து எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி பதினொரு வருடங்கள் நிறைவு பெறுகிறது. இவ்வொளி விளக்கு இவ்வுலகில் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியமே. யார் இந்த அன்னை திரேசா? கருணையே வடிவான இம்மலர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியருக்கு கடைக்குட்டியாக பிறந்தது. ஞானஸ்நானத்தின் வழியே கொன்சா அக்னஸ் என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்ட இம்மலர் 1916 ஆம் ஆண்டு தனது ஐந்தாம் வயதில் முதல் நன்மை திருவருட்சாதனத்தை பெற்றுக் கொண்டது. எந்தவொரு பணி வாழ்வில் ஈடுபடுவோரும் தமது வாழ்வில் மேடுபள்ளங்களை சந்திப்பது இயற்கையே. அப்படித்தான் இம்மலரின் வாழ்விலும் ஏற்பட்டது. தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தது. இதனால் இக்குடும்பம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய சூழலில் இம்மலர் இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தியது. தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டது. அத்துடன் தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டது. அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற விழைந்தார். இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்' என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய பெருந்தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார். அதே ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தனது "அர்ப்பண உறுதி' வார்த்தைப்பாட்டின் போது கொன்சா அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் திரித்துக் கொண்டார். அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். அன்னையவர் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருந்தது. தனது உள்ளத்து உணர்வுகள் இறை ஏவுதலால் நிரம்பப் பெற்றிருப்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது. ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். இது அன்னையவர் தனது பணிக்கு அடித்தளமிட்ட முதல் அத்திவாரமாகும். தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி தொடங்கி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார். எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றி கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். ஆக, அன்னையின் செயலில் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கினார். இதனிடையே அன்னையவர் தினமும் கரத்தில் செபமாலையை ஏந்தி செபித்து அனுதினமும் திவ்விய நற்கருணையை உட்கொண்டு இறைவனின் சந்நிதியில் சங்கமிக்கலானார். அன்னையின் வழியில் பல மாணவர்கள் இணைந்து கொள்ளலாயினர். அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார். 1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். அத்துடன் வெனிசுலா நாட்டிலும் இச்சபையை ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெனிசுலாவில் மட்டுமன்றி உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற விளைந்தனர். இத்தகைய நிலையில் சபையின் உயர் நோக்கத்தை அறிந்துணர்ந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர். மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். இச்சபைகள் 1980 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினூடாக யாவரினதும் கண்கள் அவரின்பால் திரும்பின. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச விருதான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமையை வழங்கியது. மேலும் அன்னையவர் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு அப்போதைய கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் தோமஸ் குரே ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னையவர் இரு அருட் சகோதரிகளுடன் இலங்கை வந்து இரு மாதங்கள் தங்கியிருந்தார். அவ்வேளையில் சேரிப் புறங்களுக்குச் சென்று பல உதவிகளை புரிந்தமை நினைவு கூரத்தக்கது. செக்கடித்தெரு புனித அன்னம்மாள் பங்கில் "பிரேம் நிவாஸ' எனும் பெயரில் சபை ஆரம்பிக்கப்பட்டது. காலப் போக்கில் இடவசதியின்மை காரணமாக அது முகத்துவாரம் சாந்தி நிவாஸவிற்கு மாற்றப்பட்டு சேவைதனை தற்போது தொடர்கிறது. அத்துடன் மொரட்டுவ, கண்டி, திருகோணமலை, வவுனியா, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அன்னையின் வழியில் சேவை இல்லங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன. அர்ப்பணிப்பின் இலக்கணம், சேவைகளின் பிரதிவிம்பம் அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காலப் பகுதியை ஏழைகள், பிணியாளர்கள், துன்பப்பட்டவர்கள், அநாதைகள் ஆகியோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஆறுதலுடன் இறை சந்நிதியில் சங்கமித்தார். அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாட வந்தார். அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். அன்னை திரேசாவின் வழியே அப்பொறுப்பினை தற்போது ஏற்று அன்பின் துறவற சபையை வழி நடத்தி வரும் அருட் சகோதரி நிர்மலா உள்ளிட்ட உலகெங்கும் பரந்து வாழும் அன்னை திரேசாவின் அன்பின் துறவற சபையின் அருட் சகோதரிகளின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம்

பாசத்தின் பிறப்பிடம்


பாசத்தின் பிறப்பிடம்

உயிருடன் கலந்த உறவு அம்மா

நாடித்துடிப்பின் ஒலி அம்மா

என் இதயத்தில் என்றும் அழியாத உறவு அம்மா

எனக்கு சொந்தமான உறவு என் அம்மா

உன் நினைவலைகளில் நான்

காதல் என்னும் மை எடுத்து நான் உன் முகம் வரைய நினைத்த வேளை என் உயிர் ஊசல் ஆடுதடி

என் உயிர் பிரியும் முன் உன் முகம் நான் வரைய மாட்டேனா உன் நினைவில் என்றும் நான்.

இனிய காலைப் பொழுது

மெல்லிய இளந் தென்றல் வீச இலைகளின் மேல் உள்ள பனித்துளிகள் காற்றின் இதமான அசைவால் ஒன்றுடன் ஒன்று தழுவிய வண்ணம் இருக்கின்றன.

இவற்றின் மத்தியில் வைகறையின் கதாநாயகன் தங்கத்தை குளைத்து தனது உடல் எங்கும் விசிறிய வண்ணம் தனது ஒளியினைப் பரப்ப எண்ணி வான் மேல் வீறு நடை போ டுகின்றான்

ஜந்தறிவு ஜீவன்கள் தத்தமதது குரல்களால் இறைவனைப் புகழ்ந்த வண்ணம் எழுகின்றன உறக்கத்தில் இருந்த மெட்டுக்கள் இதல்களை மெல்ல மெல்ல திறக்கின்றன.

செவ் வானம் சிவக்க அனைவரும் தத்தமது வேலை ஆரவாரத்துடன் தொடங்குகின்றனர்.

எதற்கும் கலங்காத யாழ் மகன்

காலத்தினை வென்று கால் பதிக நினைப்பவன். யாழ் மகன் காலத்தை வென்ற நாயகன். அவன் கயவர்களுக்கும் காமவெறி பிடித்தவர்களுக்கும் அரக்க குணம் படைத்தவன். காவிய நாயகர்களுக்கு அவன் ஒரு கவி பாடி.

யாழ் பொதுநூலக வரலாறு

யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு
பேராயர் எஸ்.ஜெபநேசன், 1 June 2004 (ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்)
Destruction of Jaffna Public Library - May/June 1981 Jaffna Public Library - A Konstradt for Many Tamils History of the Jaffna Public Library Rescuing the Library - 20 Years later Remembering 20 Years Later - Sangam Research யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி "சுஜாதா" 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து "கிருதயுகம்" என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.
இத்தகைய அறிவுலகச் சிறப்புக்கள் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகம் எரியூட்டலின் 20வது ஆண்டு நிறைவின்போது அதன் வரலாற்றுத் தொகுப்பை எழுதிப் பிரசுரித்திருக்கின்றார் திரு. என்.செல்வராஜா.
இந்த நூல் எரியூட்டலின் 20வது வருடப் பூர்த்தியை நினைவு கூரும் வண்ணமாக வெளியிட்டு இருக்கின்றார். இது அவருடைய பிரசுராலயமாகிய அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
அர்ப்பணிப்பும், வினையாற்றலும் உடைய உண்மையான நூலகர் ஒருவராலேயே இம்மாதிரி வரலாற்றுத் தொகுப்பு நூல் சாத்தியப்படும். மதிப்புக்குரிய என். செல்வராஜா யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நூலகமாகிய "ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின்" நூலகராகச் சேவை செய்தவர். நூற் பெறுமதி உணர்ந்தவர். நூற்பயன்பாடு அறிந்தவர். அதுமட்டுமன்றி பழம்பெரும் நூலகரும் அறிஞருமாகிய டாக்டர் வே.இ.பாக்கியநாதன் அவர்களின் நூலக நெறிப்படுத்தலின் ஊடாக பயிற்சியும் பக்குவமும் பெற்றவர். அத்தகைய நூலகவியல் அறிஞர் ஒருவர் தொகுத்து அளித்திருக்கும் வரலாற்றுத் தொகுப்பு ஆவணப் புதையலாக இந்த நூல் விளங்குகின்றது.
127 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றியும் அதன் அழிவு பற்றியும் பொதுநூலகத்தின் சேவையின் சிறப்பும் பெருமையும் பற்றியும் கட்டுரைகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரைகளை நூலகர் செல்வராஜா பல்வேறு சஞ்சிகைகளில் இருந்தும் பத்திரிகைகளில் இருந்தும் அன்புடனே தேடித் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் 45 கட்டுரைகள் காணப்படுகின்றன. அவற்றிலே 14 ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எச்.ஏ.ஐ.குணத்திலக்கா, நடேசன் சத்தியேந்திரா, பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா என்பவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் இந்நூலுக்கு அணி செய்கின்றன.
நூலுக்கு ஆசியுரையை மாநகர ஆணையாளர் வே.பொ.பாலசிங்கம் வழங்கியுள்ளார்.
1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் யாழ். பொதுநூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைத்திருக்கின்றார் ஆசிரியர்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அறிஞர்களும் சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சேர்வர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி காணப்படுகின்றது. 1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. இதற்குப்பின்னர் எரியூட்டலும் அதனைப்பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.
இந்த நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது.அவரவருக்குரிய நூல்களை, நூலக வரையறையை மீறாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதிலே யாழ். பொதுமக்கள் நூலகத்தினர் காட்டியுள்ள ஈடுபாட்டுணர்வு போற்றுதற்குரியது. இது போன்ற பல செய்திகளையும் தகவல்களையும் அக்கால நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் விபரிக்கின்றது இத்தொகுப்பு நூல்.இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் "நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்" என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..
"எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன்நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது. நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே. யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக்களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல்நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்" என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 திகதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.
நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது" என்ற சிறுநூல் யாழ் நூலகப்படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது:
"அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது ... கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்."
அனேகமாக 1981 மே மாதம் 31-ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியான 1981-ம் ஆண்டு நாழிதழ்கள், வார இதழ்கள் யவுமே (உலகம் முழுவதும்) யாழ்ப்பாண பொது நூலகத்தின் "படுகொலை"யைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தன. அவற்றைப் பற்றிய செய்திப்பதிவுகளும் அனுதாப அறிக்கைகளும் நூலகப்புனர்நிர்மாணத்திற்கான நன்கொடைகள், அன்பளிப்புகள் பற்றிய தகவல்களும் 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பெற்ற புனர்நிர்மாணஞ் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத் திறப்பு விழா மலரில் பிரசுரமான மிக முக்கியமான ஓரிரு கட்டுரைகளும், பழம்பெரும் நூலகர்கள் பற்பல துறைகளைச் சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் எரிமலை, நம்நாடு, புதமைப்பெண், புதினம் போன்ற பிறநாட்டுத் தமிழ் ஏடுகளில் பிரசுரமான கட்டுரைகளும் தமிழ் நேஷன், தமிழ் நெற், போன்ற இணையத்தளங்களின் செய்தி மற்றும் தகவல்களும் அடங்கிய ஆவணக்கருவூலப் பெட்டகமாக வெளிவந்திருக்கும் இந்த வரலாற்றுத் தொகுப்பு நூல் நூலகர் என். செல்வராஜாவின் பெயரைக் காலமெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டேயிருக்கும்.
ஏனெனில் புலம்பெயர்ந்து மேலைநாடுகளுக்குப் போன ஈழத்தமிழர்களிலேயே பெரும்பான்மையினர் தமிழனுக்கேயுரிய புறத்தையும் அகத்தையும் தொலைத்துவிட்டு சுயமுகம் இழந்து இரவல் முகம் வாங்கிவரும் இன்றைய சூழலிலே என். செல்வராஜா போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மனப்பூர்வமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவையே. மகத்தான வரலாற்றுத் தொகுப்பு நூலுக்கான இந்தத் திறனாய்வுக் கட்டுரையை பேரறிஞர் அண்ணா அமெரிக்க யேல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மண்டபத்தின் வாயில் முகப்பிலே கண்டு சொன்ன மகுட வாசகத்துடன் நிறைவு செய்கிறேன். "வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை."
நூலின் பிரதிகள் தபாலில் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். Mr. N.Selvarajah, 48 Hallwicks Road, Luton , Bedfordshire, LU2 9BH,United Kingdom . (Price including postage Sterling Pounds 10.00 Euro 15.00)